புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருவாரூரில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையல் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை உணவை சமைப்பதற்காக, சமையல் ஊழியர்கள் அங்கு சென்றபோது, சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டும், மளிகை பொருட்கள் சிதறி கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்தபோது, அங்கு மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு இருந்ததோடு, அந்த தொட்டிக்குள் மனித கழிவு கொட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பள்ளி வளாகத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்டு விட்டு, மீதம் உள்ள பொருட்களை அங்கேயே போட்டு விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது.

பின்னர் ஊழியர்கள் உடனடியாக பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் கொடுக்க, அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளியில் மலம் கலந்த குடிநீர் தொட்டி, சேதப்படுத்தப்பட்ட சமையல் பொருட்களையும் பார்வையிட்டு, ஊழியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அன்புச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: கொஞ்சம் விஷம் வாங்கி கொடுத்திருக்கலாமே! உங்க பையனுக்காக நான் துரோகியா? மனம் உடைந்த மல்லை சத்யா...
குடிநீர் தொட்டில் மலம் கலந்த விவகாரம் அறிந்த கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டு, குடிநீரில் மலம் கலந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடிபோதை ஆசாமிகள் தான் இதனை செய்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கூறுகையில், பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் உரிய விசாரணை நடத்தப்படும். தவறு யார் செய்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ஜில் கிளைமேட்.. வெயிலுக்கு டாட்டா! சரியான மழை இருக்கு.. எங்க தெரியுமா?