ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நிலவி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த அரசியல் ஆக்ஷன் படம், கடந்த ஜனவரி 9 அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.
படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தனி நீதிபதி 'யூ/ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது. பின்னர் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று, சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவுக்கு படத்தை அனுப்ப ஒப்புக்கொண்டது.

மறு ஆய்வுக் குழு படத்தை பார்த்து பரிந்துரை செய்த நிலையிலும், சில சமயங்களில் தேர்தல் ஆணையத்திடம் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது படத்தின் வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தியது. தற்போது தணிக்கை குழு அதிகாரிகள் ஜனநாயகன் படத்தை மீண்டும் பார்த்துள்ளனர். இந்த ஆய்வுக்குப் பிறகு, தணிக்கை சான்று வழங்குவது குறித்த இறுதி முடிவை சென்சார் போர்டு இன்று தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!
இந்த முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சான்றிதழ் கிடைத்தால், படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. சில தகவல்களின்படி, மே மாத முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் தணிக்கை விவகாரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனல்! கோவையில் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது!