விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அரசியல் சாயல் கொண்ட அதிரடி படமாக உருவாகியுள்ளது. விஜய் அரசியலுக்கு முழு நேரமாக மாற உள்ள நிலையில், இப்படம் அவரது திரைப்பயணத்தின் முத்தாய்ப்பாக கருதப்படுகிறது.ஆனால், படத்தின் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படக்குழு கடந்த டிசம்பர் மாதமே படத்தை தணிக்கைக்கு சமர்ப்பித்தது. டிசம்பர் 19ஆம் தேதி தணிக்கை அதிகாரிகள் படத்தை பார்வையிட்டு, சில காட்சிகளில் மாற்றங்கள், வசனங்களை மியூட் செய்ய வேண்டும் உள்ளிட்ட சிறு திருத்தங்களை பரிந்துரை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிக ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் சில அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் தொடர்பானவை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. படக்குழு அந்த மாற்றங்களை செய்து மீண்டும் சமர்ப்பித்த பிறகும், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த தாமதம் தமிழகத்தில் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கை பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் சான்றிதழ் வரும் வரை புக்கிங்கை தொடங்க தயங்கி வருகின்றன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதேநேரம், கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் புக்கிங் தொடங்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனநாயகன் படத்திற்கு எதிராக வந்த புகார்களை நாளை தாக்கல் செய்ய மத்திய தணிக்கை குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் இந்த படத்தை பார்க்காத நிலையில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என யாரும் நிர்பந்திக்க முடியாது என தணிக்கை குழு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: BLAST-U... BLAST-U..! "தளபதி கச்சேரி"... கோட் சூட்டில் மாஸாக கிளம்பிய ஜன நாயகன்...!
அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இருப்பதாகவும் இதனை அதிகாரிகள் உறுதி செய்திருப்பதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் தருவோம் என கூறப்பட்ட நிலையில் அதனை நீக்கியதாகவும் பட குழு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜனநாயக படத்திற்கு எதிராக வந்த புகார்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: பொருட்செலவை வைத்து திரைக்கலையை மதிப்பிடுவதா? சல்லியர்கள் படத்திற்கு சீமான் ஆதரவு...!