கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே பன்னம்பி குன்னு என்ற இடத்தில் அதிகாலையில் இந்த பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண் கொண்ட கார் அதிவேகமாக வந்து மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், கார் முற்றிலும் உருக்குலைந்து கிடந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை முந்திய புதுச்சேரி! பள்ளிக் கல்வி தரவரிசையில் வெளியான அதிர்ச்சி ரேங்க்! முழு விவரம்!
உயிரிழந்த எட்டு பேரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, காரை வெட்டி எடுத்து மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட எட்டு உடல்களும் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக கைப்பமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் அதிவேகமாக வந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டதா, காரில் பயணம் செய்தவர்கள் மது அருந்தியிருந்தார்களா, அதிகாலையில் பெய்த மழையால் காரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை விபத்துக்கான முழுமையான காரணம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. விசாரணை முடிவடைந்த பின்னரே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும்.
மேலும், உயிரிழந்தவர்கள் அனைவரும் மாணவர்களா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களின் சொந்த ஊர், தமிழகத்தில் அவர்கள் வசித்து வந்த இடம் உள்ளிட்ட முழுமையான விவரங்களையும், உயிரிழந்தவர்கள் யார் யார் என்பதையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக விபத்தில் உயிரிழந்த 8 பேரில் திண்டுக்கல் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சேலத்தைச் சேர்ந்த விஸ்வா, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா மற்றும் யுவசஞ்சித், சந்தோஷ், மதுரையைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரது உடல் அடையாளம் காணப்பட்டு, பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளா செல்லும் ரயில்களில் அலைமோதும் கூட்டம்! சிறப்பு ரயில்களும் ‘ஹவுஸ்புல்’