அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, காது மூக்கில் நகை போட்டு இருந்தால் ஆயிரம் ரூபாய் தரமாட்டோம் என்று கிண்டல் அடித்து பேசினார். இது தொடர்பான காணொளி வெளியான நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திட்டங்களைத் தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவதாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருகே, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம் மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம் என அமைச்சர் ராமச்சந்திரன் பேசியிருப்பது சிறிதும் அரசியல் நாகரீகம் அற்ற செயல் என்று தெரிவித்தார். தனது அரசுப் பதவியின் மாண்பினை மறந்துவிட்டு இதுபோன்ற கேலி, கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.

ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை எனக் கூறிய திமுக, அரசு அரியணையில் அமர்ந்ததும் தகுதியானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை எனப் பாதிப் பெண்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது எனவும் கூறினார். தற்போது நகை அணிபவர்களுக்கு பணம் கிடையாது எனக் கூறி மீதி பெண்களையும் விரட்டப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லையா? நயினார் நாகேந்திரன் நச் பதில்..!
திமுக அரசிடம் மகளிர் உரிமைத் தொகை வாங்க வேண்டுமென்றால் பெண்கள் தங்களிடமிருக்கும் ஆபரணங்களைக் கூட அணியக் கூடாதா என்றும் எப்பேற்பட்ட மேட்டிமைத்தனமான எண்ணமிது என்றும் சாடினார். பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் பெண்களை ஓசி எனவும், மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களை ரூ.1000-இல் கிரீம், பவுடர்லாம் வாங்கி பளபளன்னு இருக்கீங்க எனவும், உரிமைத் தொகை வரவில்லை என முறையிடும் பெண்களை மெண்டல்கள் எனவும் நாக்கில் நரம்பின்றி வசைபாடும் திமுகவினர், நகைச்சுவை என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை மட்டம் தட்டுவதையும், உருவக்கேலி செய்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும் என கேட்டுள்ளார்.
எனவே, திமுக அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, இனியும் இதுபோன்ற விமர்சனங்களைத் திமுக தலைவர்கள் தவிர்ப்பதையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு! வாழ்த்துகளை பகிர்ந்து நெகிழ்ச்சி..!