இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், எளிமையின் சிகரம் ஐயா நல்லகண்ணு (101) அவர்களின் 101 ஆண்டுகால சகாப்தம் இன்றுடன் நிறைவுற்றது. தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்த அந்த மகத்தானத் தலைவர், மறைவுக்குப் பின்னும் சமூகத்திற்குப் பயன் தர வேண்டும் என்ற தனது இறுதி விருப்பத்தின்படி, மருத்துவ மாணவர்களின் கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்து விடைபெற்றுக் கொண்டார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் 'தகைசால் தமிழர்' விருதாளர் என்ற முறையில், தோழர் நல்லகண்ணுவின் உடலுக்குத் தமிழ்நாடு காவல்துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், உணர்ச்சிப் பெருக்குடன் "வீர வணக்கம்... வீர வணக்கம்..." என முழக்கமிட்டு வழியனுப்பி வைத்தார்.

சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கட்சிப் பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் திரண்டனர். எளிமையின் சிகரமே விடைபெறுக!, விடைபெற்றார் மாவீரர் தோழர்! என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
இதையும் படிங்க: தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!
தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகப் போராடிய அவர், மறைவிற்குப் பின் தனது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவ வேண்டும் என விரும்பியிருந்தார். அதன்படி, அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரி (MMC) அதிகாரிகளிடம் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

எளிமை, நேர்மை மற்றும் சமரசமற்றப் பொதுவுடைமைச் சிந்தனைக்குச் சான்றாக விளங்கிய ஒரு சகாப்தம், இன்று மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி அறைகளுக்குள் தனது அடுத்தக்கட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
வாழ்ந்த போது நிலத்திற்காகவும், மக்களுக்காகவும் போராடிய ஒரு மாபெரும் தலைவர், இன்று வருங்கால மருத்துவர்களின் அறிவு வளர்ச்சிக்காகத் தனது உடலையே தந்துவிட்டுச் சென்றிருப்பது தமிழக வரலாற்றில் ஒரு அழியாதத் தடம்.
இதையும் படிங்க: நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!