கூலி தொழிலாளி கொலை வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி அ.தி.மு.க. 11 வது வார்டு கவுன்சிலருக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் மகன் ஜான்விக்டர் (வயது 43). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து உள்ளார். இதற்கான கூலி தொகையை ஜான்விக்டர் கொடுக்கவில்லை.இதையடுத்து பால்ராஜ் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி ஜான்விக்டர் வீட்டிற்கு சென்று கூலி தொகையை கேட்டு உள்ளார்.
அப்போது அங்கிருந்த ஜான்விக்டர், அவரது தாய் மேரி ஸ்டெல்லா, தங்கை விமலா ஆகியோர் பால்ராஜை தாக்கி உள்ளனர். இதைகண்ட பால்ராஜின் தம்பி கூலி தொழிலாளியான மார்ட்டின் சார்லஸ் ஓடி சென்று அவர்களை தடுத்துள்ளார். அப்போது அவர்கள் 3 பேரும் மார்ட்டின் சார்லஸையும் தாக்கினர். இதில் மார்ட்டின் சார்லஸ் படுகாயம் அடைந்தார்.
பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையும் படிங்க: "நாயை நிப்பாட்டினாலும்"... மானங்கெட்டு போய் கூட்டணியில் இருக்குதா காங்கிரஸ்? விளாசிய அதிமுக..!!
நடந்த சம்பவம் குறித்து அவர் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்விக்டர், அவரது தாய் மேரி ஸ்டெல்லா, தங்கை விமலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்ற பொது வழக்கறிஞர் பழனி ஆஜரான நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் தீர்ப்பு கூறினார். கூலி தொகை கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் கூலிதொழிலாளியை அடித்து கொலை செய்த ஜான்விக்டருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 -ம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மேரிஸ்டெல்லாவிற்கு ரூ.500 அபராதமும், தங்கை விமலாவிற்கு ரூ.1000-மும் விதிக்கப்பட்டது. பின்னர் ஜான்விக்டரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஜான்விக்டர் தற்போது வேட்டவலம் பேரூராட்சியில் 11-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பத்தூரை தினகரனுக்கு தாரை வார்ப்பதா? அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி..! பரபரப்பு..!!