தமிழ்நாட்டில் மாம்பழ விவசாயிகள் தற்போது கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக நடப்பாண்டில் உரிய விலை கிடைக்காமையால் பெரும் துயரத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் மாம்பழ உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் மாம்பழங்களை குப்பையில் கொட்டுவது, மரங்களை வெட்டுவது, அல்லது மீன்களுக்கு உணவாக அளிப்பது போன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, கிருஷ்ணகிரியில் ஆண்டுதோறும் 35,000 ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. 2025-ல் மழையால் இரட்டிப்பு மகசூல் கிடைத்த போதும், நோய் தாக்குதல் மற்றும் குறைந்த விலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? காவலர்களை வஞ்சிக்கும் திமுக அரசு.. டிடிவி தினகரன் கடும் சாடல்..!
பெங்களூரு ரக மாம்பழங்கள் (80% உற்பத்தி) மாங்கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதற்கு போதிய வருவாய் இல்லை. ஆந்திர மாநில அரசு மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு கொள்முதல் விலையை நிர்ணயித்து மானியம் வழங்குவது போல, தமிழக அரசும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இதனிடையே திமுக அரசு மா விவசாயிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திசை திருப்பும் அரசியல் அம்பலப்பட்டு உள்ளது என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
திமுக அரசின் செயலற்ற திறனால் தமிழகத்தில் இன்று மா விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பிரச்சனையை மத்திய அரசிடம் தள்ளி விட்டு தப்பி விடலாம் என எண்ணுகிறார்.

அண்டை மாநிலமான ஆந்திராவில், அம்மாநில அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து, மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றி மா விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. இன்றைய தினமலர் நாளிதழில் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழ். மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு மா விவசாயிகள் தவிக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சர் ஊர் தோறும் தனது தந்தையான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் உருவச்சிலையை திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். கட்சியினருடன் சேர்ந்து விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் எந்தப் பிரச்சனை என்றாலும் மத்திய அரசு மீது கைகாட்டி தப்பிக்க முயல்வதையே முதலமைச்சர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். திரு. மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக மக்கள் தேர்வு செய்தது எதற்காக?
குடும்பம் வளம் கொழிக்க மன்னராட்சி நடத்தும் முதலமைச்சருக்கு மா விவசாயிகளை பற்றி எப்படி கவலை இருக்க முடியும்..? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!