பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தடுப்புகளைத் தாண்டி உள்ளே சென்றதால் பரபரப்பு நிலவுகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை 2 மணி முதலே கோயிலைச் சுற்றி பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், குடமுழுக்கு விழா நடைபெறும் நேரத்தில் 8 வகையான வண்ணங்களில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே குடமுழுக்கைக் காண அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பொதுமக்களுக்கு காலை 10 மணிக்குப் பிறகுதான் பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!
ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவையும், ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் புனித நீர் ஊற்றப்படுவதையும் காண்பதற்காகத்தான் நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறி, மேற்குவாசல் அருகே உள்ள மேலமாசி வீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 2 மணி முதலே குவிந்தனர். அவர்கள் தொடர்ந்து காவல்துறையினருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில், இங்கு குவிந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேற்குவாசல் வீதி வழியாக கோயிலுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் பேரிகார்டுகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். அந்தத் தடுப்புகளை பொதுமக்கள் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
அதுமட்டுமின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பொதுமக்களைத் தடுக்க முயன்றபோது, அவர்களையும் பொதுமக்கள் தள்ளிக்கொண்டு குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக உள்ளே நுழைந்தனர். தற்போது மேற்குவாசல் வீதி வழியாக சித்திரை வீதியை நோக்கி இங்கு கூடியுள்ள பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
தற்போது காவல்துறையினர் மேற்குவாசல் வீதியில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பேரிகார்டுகளைத் தள்ளி வைத்துள்ளனர். பொதுமக்களே பேரிகார்டுகளைத் தள்ளிக்கொண்டு சென்றதால் இந்தப் பகுதி பரபரப்பாகக் காட்சியளித்தது.
தற்போது காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாலும், பொதுமக்கள் மேற்குவாசல் வீதி வழியாகச் சென்று சித்திரை வீதியில் நின்று குடமுழுக்கு விழாவைப் பார்ப்பதற்காக கூடியுள்ளனர்.
குறிப்பாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் சித்திரை வீதியில் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் 8 வகையான சிறப்பு அனுமதி நுழைவுச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து குடமுழுக்கு விழாவையும், புனித நீராட்டு விழாவையும் பார்ப்பதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று கூறி, காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, பொதுமக்களுக்குப் போதிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை என்றும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்து தரப்படவில்லை என்றும் பக்தர்கள் பரவலாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!