மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் துரை வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல், துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து பின்னர் அதை வாபஸ் பெற்றதன் மூலம் வெளிப்பட்டது. மல்லை சத்யா, மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும், கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருப்பவர், கட்சியில் துரை வைகோவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் வாரிசு அரசியல் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
வைகோவின் மகனான துரை வைகோ, கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து, 2024இல் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மோதலின் பின்னணியில், சமூக வலைதளங்களில் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் மற்றும் துரை வைகோவின் ஆதரவாளர்கள் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்தனர். மல்லை சத்யா, வைகோவை தனது உயிரை மூன்று முறை காப்பாற்றியவர் என்றும், தன்மீது துரோகி என்ற பழி சுமத்தப்பட்டது தாங்க முடியாத மனவேதனையை அளித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். மல்லை சத்யா தன்னை கட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டினார்.

மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் மதிமுகவிலிருந்து மல்லை சத்யாவை தற்காலிகமாக வைகோ நீக்கினார். கட்சிக்காக பயிர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி அவரை சஸ்பெண்ட் செய்ததுடன் தம்மிடம் உள்ள மதிமுக உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்க கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மல்லை சத்யா 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
இதையும் படிங்க: மல்லை சத்யாவுக்கு அவ்ளோ தான் டைம்... கெடு விதித்த வைகோ! பதில் சொல்லலனா...
இந்த நிலையில் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். ஒரே நாளில் விளக்க கடிதமும் கட்சியிலிருந்து நீக்குவது குறித்து நடவடிக்கையும் எடுக்க முடியுமா என்றும் தன்னுடைய விளக்கம் பெறாமலேயே தற்காலிக நீக்கம் செய்ததாகவும் தெரிவித்தார். மரண தண்டனை கைதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றும் முன் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தனக்கு நடந்தது ஜனநாயக படுகொலை அல்லவா எனவும் கேட்டுள்ளார்
தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னால் உங்கள் மகன் துரை வைகோ இருக்கிறார் என்பது தானே உண்மை எனவும் நான் துரோகியா என்றும் கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறிய துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது என்றும் அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்! வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!