தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ்நாட்டின் எல்லைக் காவலையும் உலகுக்கு உணர்த்திய சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 121ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1906 ஜூன் 26ஆம் தேதி சென்னை சால்வன் குப்பத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மா.பொ.சிவஞானம், சிறு வயதிலிருந்தே தமிழ் மொழியின் மீது தீராத பற்றுக் கொண்டிருந்தார். நெசவுத் தொழிலாளியாகவும், அச்சுக் கோக்குபவராகவும் தொடங்கிய அவரது வாழ்க்கை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபோது திருப்புமுனையைச் சந்தித்தது. சிறைவாசத்தின்போது சிலப்பதிகாரத்தை ஆழமாகப் படித்து, அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்தார்.

இதனாலேயே அவர் ‘சிலம்புச் செல்வர்’ என்று புகழ் பெற்றார்.1956ஆம் ஆண்டு தமிழ்நாட்டைத் தனி மாநிலமாக உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த அவர், ‘தமிழ் மாநில சிற்பி’ என்று போற்றப்படுகிறார். தமிழரசுக் கழகத்தைத் தொடங்கி, தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தார். சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன், கல்விக் குழுத் தலைவர், தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த அவர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவராகத் திகழ்ந்தார்.
இதையும் படிங்க: கூட்டணி முறிவா..? தனித்து விடப்படுமா திமுக..? இன்று மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம்..!
1995 அக்டோபர் 3ஆம் தேதி அவர் காலமானாலும், அவரது பங்களிப்பு தமிழ் சமூகத்தின் நினைவில் என்றும் நிலைத்திருக்கிறது.ஆண்டுதோறும் ஜூன் 26 அவரது பிறந்தநாள் தமிழக அரசால் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 121ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தியாகராய நகர் போக் சாலையில் உள்ள அவரது சிலை அலங்கரிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் மற்றும் ஆனந்த், அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்த் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தவெகவினரின் அட்ராசிட்டி... நகராட்சி அலுவலகத்திற்குள் கும்பலாக நுழைந்து செய்த காரியம்...!