தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பிரபல தொழிலதிபர் மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுப் புதிய சாதனை படைத்துள்ளனர். வெவ்வேறு கட்சிகளின் சார்பில் களம் கண்ட போதிலும், மூன்று பேருமே மக்களின் பேராதரவைப் பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர்.
மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தேர்தல் வெற்றி விபரங்கள் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், 60,795 வாக்குகளைப் பெற்று, 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, 66,445 வாக்குகளைப் பெற்று, 17,302 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் லஜக சார்பில் போட்டியிட்ட மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 16,592 வாக்குகளைப் பெற்று, 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
தமிழகத்தில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள சூழலில், அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல், லால்குடியில் அதிமுக சார்பில் லீமா ரோஸ் பெற்ற வெற்றியும், புதுச்சேரியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பெற்ற இமாலய வெற்றியும் மார்ட்டின் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளன.
தமிழகம் முழுவதும் திராவிடக் கோட்டைகள் சரிந்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!