மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. துரை வைகோ, முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மல்லை சத்யாவை மறைமுகமாக குறிப்பிட்டு, கட்சிக்கும் தலைமைக்கும் பழி சுமத்தும் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. வைகோவின் குற்றசசாட்டு தொடர்பாக பேசிய மல்லை சத்யா, துரோகி பட்டம் கொடுத்து கட்சியில் இருந்து தன்னை வைகோ வெளியேற்ற பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கட்டுகிறார் என கூறி இருந்தார்.

இந்த நிலையில், துரை வைகோ அரசியலில் எல்.கே.ஜி. தான் என மல்லை சத்யா கூறி இருந்தார். துரை வைகோவின் வருகைக்கு பிறகு, அவர் சொல்லும் நபர்கள் மட்டுமே வைகோவைச் சந்திக்க முடியும் என்றும் அவர் அனுமதித்தால் மட்டுமே, வைகோவுடன் போனில் பேச முடியும் எனவும் கூறினார். ஜூலியஸ் சீசர்-புரூட்டஸ், ஏசு கிறிஸ்து-யூதாஸ், வீர பாண்டிய கட்ட பொம்மன்-எட்டப்பன் என பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றதாக கூறி இருந்தார்.
இதையும் படிங்க: துரை வைகோ அரசியலில் LKG பாப்பா..! மல்லை சத்யா கடும் தாக்கு..!
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் தங்களது கார்களில் இருந்து மதிமுக கொடிகளை நிர்வாகிகள் அகற்றி வீசினர். மல்லை சத்யாவை துரோகி என கூறிவிட்டதாக தெரிவித்து ஆவேசமடைந்தனர். வாகனங்களில் இருந்து கொடிகளை அகற்றிய நிர்வாகிகள் தலையை சுற்றி தூக்கி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள மதிமுக நிர்வாகிகள் கொடிகளை அகற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கிரீன் சிக்னல் காட்டிய பாஜக... திமுக நிகழ்ச்சியில் மிஸ்ஸான ஆன மதிமுக...!