சென்னை: காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசியதற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை தீர்மானமாக நிலைநாட்ட தேவையான அனைத்து முன்னெடுப்புகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குறிப்பாக, மேகதாது அணை விவகாரத்தில் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், உச்சநீதிமன்றத்தில் வழக்கை தீவிரப்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தினார். காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு உறுதியாக உள்ளது.
இதையும் படிங்க: கன்னடம் பிறக்கும் முன்பே காவிரி எங்களுடையது! மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை வெளுத்து வாங்கிய சீமான்!

கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து மேகதாது அணைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த முயற்சியையும் மத்திய அரசும், கர்நாடக அரசும் கைவிட வேண்டும் என்பது தமிழகத்தின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்கும் அளவு பெருமளவில் குறையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதிப்பதோடு, குடிநீர் பிரச்னையையும் உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த விவகாரத்தில் தீவிரமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவது தமிழக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் மத்திய அரசுடனும், கர்நாடக அரசுடனும் தமிழக அரசு தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!