வடசென்னை பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து வினியோகம் செய்யப்படும் பால் அளவு கடுமையாகக் குறைந்துள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே வடசென்னை முழுவதும் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.
பெரம்பூர், திரு.வி.க. நகர், கொளத்தூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, மாதவரம், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கடைகளில் காலையிலேயே மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்தது. மதிய வினியோகமும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதால், பால் வாங்க வந்த பொதுமக்கள் வெறுங்கையுடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடைகளில் ஆவின் பால் உடனடியாக விற்றுத் தீர்ந்து விடுவதால், பலரும் தனியார் நிறுவனங்களின் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாட்டுக்கு மாதவரம் பால் பண்ணையில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையே முக்கிய காரணம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆலங்குளத்தில் பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
அவர் கூறியதாவது: “மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் ஒப்பந்தம் எடுத்துள்ள அதே ஒப்பந்ததாரருக்கு மாதவரம் பண்ணையிலும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்ததாரர் தேவையான அளவு தொழிலாளர்களை நியமிக்கத் தவறிவிட்டார்.
பொதுவாக 50 பேர் செய்து வந்த பணிகளைத் தற்போது வெறும் 8 பேர் மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் பால் உற்பத்தி மற்றும் வினியோகம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன. வினியோகஸ்தர்களுக்கு பால் தாமதமாகவும், குறைந்த அளவிலுமே வழங்கப்படுகிறது. ஆவின் நிர்வாகம் இந்த தொழிலாளர் பற்றாக்குறையை உடனடியாகச் சரி செய்யத் தவறியதே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம்” என்றார்.

மேலும், “ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்க்காவிட்டால், நாளை வடசென்னை முழுவதும் பால் வினியோகம் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளது. எனவே ஆவின் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தேவையான தொழிலாளர்களை நியமித்து பால் வினியோகத்தை சீராக்க வேண்டும்” என்று பொன்னுசாமி வலியுறுத்தினார். வடசென்னை பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவையான ஆவின் பாலுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மணிப்பூரில் வெடித்த வன்முறை..!! மூடப்பட்ட கடைகள், சந்தைகள்..!! மக்கள் நடமாட்டமின்றி வெறிச்..!!