சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற விழிப்புணர்வு மாராத்தான் போட்டியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சருடன் மாரத்தானில் பங்கேற்று ஓடினார். அதனைத் தொடர்ந்து காமராஜர் சாலையில் மாரத்தானை நிறைவு செய்த ஆதவ் அர்ஜுனா, அங்கிருந்தவர்களிடையே உரையாற்றினார்.
ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: இந்த அரசு யாருக்காக என்றால், முதலில் இளைஞர்களுக்காகவும், பெண்களுக்காகவும்தான். இந்த மரத்தானில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்யச் சொன்ன உடனே, சில நாட்களிலேயே 15 ஆயிரம் பேர் பதிவு செய்துவிட்டார்கள். அதற்குப் பிறகும் மேலும் 10 ஆயிரம் பேர் பதிவு செய்யக் காத்திருந்தார்கள். மொத்தத்தில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர், வயது வித்தியாசம் இல்லாமல் 10 வயது முதல் 60, 70 வயது வரை இந்த மரத்தானில் பங்கேற்றிருக்கிறார்கள். இது நம்முடைய முதல் மரத்தான்.
அதனால் நான் "நன்றி" என்று சொல்லக் கூடாது. நம்முடைய முதலமைச்சர் இனியும் விளையாட்டுத்துறையின் முகமாக இருக்கப் போகிறார். அவர் நம்ம விஜய் அண்ணன்தான். அவர் ஓட ஆரம்பித்துவிட்டார் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் இனிமேல் போதைப்பொருளை தூக்கி எறிந்துவிட்டு ஓடப் போகிறார்கள்.
இதையும் படிங்க: குட்நியூஸ்... இவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு...!

அதற்கான விளையாட்டு மைதானங்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நம்ம விஜய் அண்ணன், "எங்கெல்லாம் காலி மைதானங்கள் இருக்கிறதோ, அது எந்தத் துறைக்குச் சொந்தமானதாக இருந்தாலும் பரவாயில்லை. விளையாட்டு மேம்பாட்டுத் துறை அதற்கான ஒப்பந்தம் செய்து, மின்விளக்கு வசதி, வேலி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, இளைஞர்கள் விளையாடும் வகையில் தயார் செய்யுங்கள்" என்று உத்தரவிட்டிருக்கிறார். அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அதனால், "மைதானம் இல்லாததால் எங்களால் விளையாட முடியவில்லை; நாங்கள் விளையாட விரும்புகிறோம், ஆனால் மைதானம் தரவில்லை" என்று இனிமேல் யாரும் சொல்ல முடியாது. இன்னும் ஒரு வருடத்திற்குள் பாருங்கள், எங்கு பார்த்தாலும் விளையாட்டு மைதானங்கள்தான் இருக்கும். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடலாம்.
எப்போதுமே விளையாட்டில் ஒரு விஷயம் சொல்வோம். நானும் ஒரு தேசிய அளவிலான பேஸ்பால் வீரர். நேரு விளையாட்டு அரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில்தான் படித்தேன். தேசிய வீரராக இருந்தேன். இங்கு இருக்கும் அனிதா என்னுடைய சக ஊழியர். இங்கு இருக்கும் பல வீரர்களைப் போல நானும் விளையாட்டு விடுதியில் தங்கி வளர்ந்தவன்.
அதனால்தான், ஒரு தேசிய அளவிலான கூடைப்பந்து வீரராக இருந்த நான், விளையாட்டு சங்கத் தலைவராக இருந்து, இன்று உங்கள் முன்னால் விளையாட்டுத் துறை அமைச்சராக நிற்கிறேன்.
விளையாட்டு என்பது ஒரு வாழ்க்கை முறை. முதலில் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
கல்லூரியில் படிக்கும்போது நிறைய இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவார்கள். போட்டிகளில் பங்கேற்பார்கள். ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்வார்கள். பதக்கங்கள் வெல்வார்கள். தேசிய அளவில் விளையாடுவார்கள். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கனவு காண்பார்கள்.
ஆனால் சில மாணவர்கள் மன அழுத்தமோ, மனச்சோர்வோ வந்தால் என்ன செய்கிறார்கள்? மதுவை நாடுகிறார்கள். பொழுதுபோக்காக குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு போதைப்பொருளையும் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
குடிக்கும்போது, "யாருக்கு ஸ்டாமினா அதிகம்? வாங்க ஐந்து ரவுண்ட் குடிப்போம், ஆறு ரவுண்ட் குடிப்போம். யார் கடைசிவரை நிற்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஸ்டாமினா" என்று நகைச்சுவையாகப் பேசுவார்கள்.
ஆனால் இளைஞர்களே, அதுதான் உண்மையான ஸ்டாமினா கிடையாது. காலணியை அணிந்துகொண்டு ஒரு கிலோமீட்டர் ஓடிப் பாருங்கள். இரண்டு கிலோமீட்டர் ஓடிப் பாருங்கள். மூன்று கிலோமீட்டர் ஓடிப் பாருங்கள். யாரால் ஆறு கிலோமீட்டர் ஓட முடிகிறதோ, அவர்கள்தான் உண்மையில் உடல் தகுதியும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள். அதுதான் உண்மையான ஸ்டாமினா.
ஒரே இடத்தில் உட்கார்ந்து மது அருந்துவதோ, வேறு ஏதாவது பானங்களை குடிப்பதோ ஸ்டாமினா அல்ல. அது தவறான பழக்கம். உண்மையான ஸ்டாமினா என்னவென்றால், நம்மைப் போல அதிகாலையில் ஆறு மணிக்கே காலணியை அணிந்து, ஆறு கிலோமீட்டர் ஓடி, இறுதிக் கோட்டைத் தொடுவதுதான்.
இன்று உங்களுடைய உடற்தகுதி எந்த அளவில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். யாரால் ஆறு கிலோமீட்டர் ஓட முடியவில்லையோ, அவர்கள் இனிமேல் தினமும் பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
சிறப்பாக ஓடிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஓட முடியாமல் நடந்தே வந்தவர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். ஓட முடியவில்லை என்றால் பரவாயில்லை. குறைந்தபட்சம் தினமும் ஒன்றரை மணி நேரமாவது நடக்க வேண்டும். செல்போனை ஓரமாக வைத்துவிட்டு, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நடைப்பயிற்சி செய்யுங்கள்.
நாங்கள் விளையாட்டு வீரர்கள். எங்களுக்கு ஏதாவது மன அழுத்தம் இருந்தால், வேறு எதையும் செய்ய மாட்டோம். காலையில் சென்று ஒரு மணி நேரம் போட்டியில் விளையாடிவிட்டு வருவோம். அந்த ஒரு மணி நேரம் விளையாடியவுடன் மன அழுத்தம் தானாகவே மறைந்துவிடும்.

அதனால், அண்ணன் சொன்ன மாதிரி எல்லாரும் சேர்ந்து சொல்லலாமா?
"ஸ்டார்ட் ரன்... ஸ்டாப் ட்ரக்ஸ்!"
மறுபடியும் சொல்லுங்கள்...
"ஸ்டார்ட் ரன்... ஸ்டாப் ட்ரக்ஸ்!"
இனிமேல் தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மட்டுமல்ல, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஓட வேண்டும். எட்டு வயதில் இருந்தாலும் ஓடலாம். 20 வயதிலும் ஓடலாம். 40 வயதிலும் ஓடலாம். 60 வயதிலும் ஓடலாம்.
ஏனென்றால், வெட்டரன் தடகளப் போட்டியில் 92 வயது நிரம்பிய ஒருவர் கூட இரண்டு கிலோமீட்டர் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். அதனால் வயது என்பது ஒரு தடையே கிடையாது. அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக ஓடத் தொடங்க வேண்டும்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மக்களே தயாரா??... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட்நியூஸ்...!