மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கனவே விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது மீண்டும் மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது. மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை என்றும் மின் கட்டணம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது.மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இதையும் படிங்க: உயர்த்தப்படுகிறதா மின் கட்டணம்? குழப்பத்தில் மக்கள்; மின்வாரிய தலைவர் விளக்கம்!!

பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16%-க்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும். குடிசை-குறுந்தொழில் மற்றும் விசைத்தறி நுகர்வோர்களுக்கும், வீட்டு மின் இணைப்புகளுக்கும் எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை.

100 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கும் எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை. தற்போதுள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். 2.83 கோடி மின் நுகர்வோர் எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவு ஏற்படும். விவசாயம், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கீழடி விவகாரத்தில் இதுதான் அவங்க நோக்கம்... உண்மையை உடைத்த கனிமொழி!!