வரும் 24ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். முதலமைச்சரின் டெல்லி பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை பெற கூட்டத்தில் நிலைமையை வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாகவும், சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது என்றும் சரமாரியாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: அன்று அப்பா... இன்று மகன்... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு - ஸ்டாலினை சாடிய இபிஎஸ்...!

பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா என கேள்வி எழுப்பினார். இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை.,பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை., கலைஞரின் கரம் பற்றி நடந்த கை., எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்., என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்ச ஸ்டாலின், கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்., தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் மின்கட்டண உயர்வு? அமைச்சர் சிவசங்கர் கொடுத்த பரபரப்பு அறிக்கை..!