எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை இலங்கை கடற்படை அடிக்கடி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உரிய தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
புத்தாண்டின் தொடக்கத்திலேயே நடைபெற்றுள்ள இச்சம்பவம், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அவல நிலையை மீண்டும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று தொடர்ந்து கைது செய்வதும், அவர்களது மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்வதும் தடையின்றி நடைபெறுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 73 மீனவர்களும், 251 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் காவலில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிட்வா புயலால் உருக்குலைந்த இலங்கை..!! நிவாரண நிதியை அறிவித்தது இந்தியா..!!
இந்தத் தொடர்ச்சியான கைது சம்பவங்கள், தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களிடையே பெருத்த இன்னல்களையும், பதட்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார். மீனவர்களையும் படகுகளையும் மீட்க தூதரக நிலையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா மர்ம மரணத்தின் உண்மை என்னாச்சு? சொல்லுங்க முதல்வரே..! TVK சரமாரி கேள்வி..!