தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறுகளைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பரப்பி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் மோடி தமிழ்நாட்டின் பெயரை மாற்றி விடுவார் என எந்த ஒரு அடிப்படையும் இன்றி முதலமைச்சர் ஸ்டாலின் புரளி கிளம்பி வருவதாக நயினார் கண்டித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் தங்களைப்போல அல்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்திற்கு அடிக்கடி வருவதோடு, ஒவ்வொரு முறையும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்தின் வளர்ச்சிக்காக நல்கி வருபவர் பிரதமர் மோடி என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, தமிழின் பெருமையையும் தமிழ்நாட்டின் அருமையையும் நன்கு உணர்ந்து, உலகெங்கிலும் தமிழ் மண்ணின் புகழைப் பரப்பி வருபவர் பிரதமர் மோடி எனவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அவர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார் என எந்தவொரு அடிப்படையுமின்றி புரளியைக் கிளப்புவது தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல என்றும் திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி மக்களை நம்ப வைக்கும் கோப்பல்ஸ் தத்துவத்தைக் கையிலெடுத்து மக்களை முட்டாளாக்க நினைக்கும் உங்கள் எண்ணம் இனியும் செல்லுபடியாகாது எனவும் திட்டவட்டமாக கூறினார். இந்தத் தேர்தலில் உங்களை வீட்டிற்கு அனுப்பத் தமிழக மக்கள் தயாராகவுள்ளனர் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!
தேர்தல் நெருங்கிவிட்டதைக் கருத்தில் கொண்டாவது, தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்து, சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கையும், மக்கள் மனதையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் திசைதிருப்பு நடவடிக்கையை விடுத்து தோல்விக்குத் தயாராகுங்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்றில் இரண்டு முறை காலி... சாத்தூருக்கு தாவிய நயினார்... நெல்லை சென்டிமெண்ட் ரகசியம் தெரியுமா?