தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளுக்கான வாடகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியின் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தகவல் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வெளி மாவட்ட அரவைகளுக்காக எடுத்துச் செல்லும் செயல்முறையில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருவதாக தெரிவித்து உள்ளார். இந்நிலையில் இந்தப் போராட்டத்தின் காரணமாக அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மேலும் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஏற்கனவே மழை வெள்ளத்தாலும், முறையான கொள்முதல் நடைபெறாத காரணத்தாலும் பல மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் முளைப்பு கட்டிப்போயுள்ள நிலையில், நமது அரசு இயந்திரத்தையும் விவசாயப் பெருமக்களையும் மேலும் நிலைகுலையைச் செய்யும் இந்தப் போராட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது திமுக அரசின் தலையாய கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவசரத்தின் பின்னால் அருவருப்பான அரசியல்... உண்மை வெளிவரும்... சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு நயினார் வரவேற்பு...!
எனவே, அரசு அதிகாரிகள் உடனடியாக லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டுமெனவும், ஏற்கனவே தேக்கத்தில் உள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டுமெனவும் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தென்னை விவசாயிகள் பெருமூச்சு… வாடல் நோயை கட்டுப்படுத்த குழு..! அண்ணாமலை பெருமிதம்…!