அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடம் பெறவுள்ளதாக வெளியான தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில், தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்தார்.
ஆனால் தவெக பெரிய கட்சி என்று காண்பித்துக் கொள்வதற்காக இதுபோன்ற ஒரு தகவலைப் பரப்புவதாகச் சொல்கிறார், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தமும், திமுக தூண்டுதலின் பேரிலேயே ஆதவ் அர்ஜுனா இப்படியொரு தகவலைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டுகிறார், அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரமும் சரமாரியாக தவெகவை விமர்சித்தனர்.
இதில் யாருடைய கருத்து உண்மை என்ற விவாதம் ஒருபுறமிருக்க, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படியொரு பேச்சுவார்த்தையை பாஜக முன்வைத்ததா என்ற கேள்வியும் எழுந்தது.
இதையும் படிங்க: விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு... சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!
தற்போது அந்த சர்ச்சைக்கு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்தும் முக்கிய நபரான உள்துறை அமைச்சர் அமித் ஷாவே விளக்கம் கொடுத்திருக்கிறார். விஜய் எங்கள் கூட்டணியில் இணைந்தால் பாஜகவிற்கு வரும் வாக்குகள் பாதிக்கப்படும். எனவே தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2026-ல் பங்கேற்று பேசிய அமித் ஷா, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யின் கட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
"நாங்கள் அதை முயற்சிக்கவில்லை," என்று கூறிய அவர், அத்தகைய நடவடிக்கை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டார். "அவர் எங்களுடன் வந்தால், எங்கள் வாக்கு வங்கியில் அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும் என்று நான் உணர்கிறேன்" எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!