இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான நீட்-யுஜி (NEET-UG) கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. ஆனால், தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு சம்பவம் அண்மையில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு காரணமாக தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று மே 3-ம் தேதி நடைபெற்ற தேர்வை முழுமையாக ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
இந்த முடிவு மருத்துவக் கனவு நோக்கி தீவிரமாக தயாரித்து வந்த லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்து, நீட் தேர்வு முறையின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பின. “மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவது ஏற்கத்தக்கதல்ல” எனக் கூறி, மத்திய அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், தேர்வு முகமை இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. ஏற்கெனவே பதிவு செய்த அனைத்து விண்ணப்பதாரர்களும் மறுதேர்வில் பங்கேற்கலாம். புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என NTA தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! SFI அமைப்பினர் மீது பாய்ந்த வழக்குகள்..!
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். “அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை முழுமையாக ஆன்லைன் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இனிமேல் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாத வகையில் தேசிய தேர்வு முகமையை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார். மேலும், வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பாரபட்சமற்ற முறையில் நடத்தும் என்றும் உறுதியளித்தார்.

நீட் தேர்வு முறைகேடு சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த மறுதேர்வு மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தாலும், தேர்வு முறையில் முழுமையான சீர்திருத்தம் தேவை என்கின்றனர் கல்வியாளர்கள். ஏற்கெனவே ஒரு முறை தயாராகி, தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் பாடங்களைப் படித்து தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் போட்டித்தேர்வு முறையின் பலவீனங்களை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ள சீர்திருத்தங்கள் விரைவில் அமலுக்கு வர வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பேரதிர்ச்சி..! நீட் தேர்வு ரத்து... தேர்வு முகமை அதிரடி அறிவிப்பு!