மருத்துவப் படிப்பிற்கான நீட் - யுஜி 2026 நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள சிபிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக முதற்கட்டத் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு மே 3-ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்ட நீட் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வகையில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் சிபிஐ தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்! வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
குற்றச்சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம், திருட்டு மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் (FIR) பதியப்பட்டுள்ளது. இது வெறும் வினாத்தாள் கசிவு மட்டுமல்லாமல், இதில் பெரும் பணப்பரிமாற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஊழல் தடுப்புச் சட்டமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேட்டின் பின்னணியில் உள்ள ‘மாஃபியா’ கும்பலை வேரறுக்க சிபிஐ பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முறைகேட்டில் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்புகள் இருக்கலாம் என்பதால், அதனை ஆராய சிபிஐ-யின் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு விரைந்துள்ளன. வினாத்தாள் முன்கூட்டியே யாருக்கெல்லாம் பகிரப்பட்டது, இதற்குப் பின்னால் இருக்கும் மூளை எது என்பது குறித்து ரகசியத் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
தேர்வின் நேர்மையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல மாநிலக் காவல்துறையினர் சிலரைக் கைது செய்துள்ள நிலையில், சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது விசாரணையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறைகேட்டால் தேர்வு ரத்து செய்யப்படுமா அல்லது மறுதேர்வு நடத்தப்படுமா என்ற அச்சத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
பணபலம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பெற முடியும்" என்ற அவலநிலையை உருவாக்கும் இத்தகைய முறைகேடுகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: மருத்துவக் கனவுகளின் தேசிய போட்டி..!! நாளை மறுநாள் நீட் தேர்வு..!! AI மூலம் கண்காணிப்பு..!!