மீண்டும் நெல்லையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய மோதல் தலை தூக்குகிறதா? என பொதுமக்கள் அதிர்ச்சி
நெல்லை மாவட்டம் என்றாலே சாதிய மோதல் அதிகளவில் நடைபெறக்கூடிய மாவட்டமாக தமிழகம் முழுவதுமே பேசும் பொருளாக மாறி இருக்க கூடிய பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது.
காவல்துறையும் அடிக்கடி பள்ளி கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய போதிலும் இதுபோன்ற சாதிய மோதல் சம்பவங்கள் அடிக்கடி மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதையும் படிங்க: நெல்லையில் தொடரும் பயங்கரம்... 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 வாரத்தில் இத்தனை வழக்குகளா?
அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை தாக்கப்பட்ட சம்பவம் முதல் ஏராளமான சாதிய மோதல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்பொழுதும் அது போன்ற ஒரு சம்பவம் நெல்லையில் நடைபெற்றிருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி நடுக்கல்லூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நடுக்கல்லூர் பகுதியைச் சார்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடுக்கல்லூர் பகுதியைச் சார்ந்த வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவர்கள் இரு தரப்பினர் ஒருவரோடு ஒருவர் பள்ளி வளாகம் அருகே வைத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவன், மதிய நேரத்தில் தாக்கிய மாணவனை பார்த்து பள்ளி வளாகத்தில் முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் எதிர்தரப்பு மாணவனை மாலையில் வீடு திரும்பும் பொழுது தாக்கி இருக்கிறார். இது குறித்து சுத்தமல்லி காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயதுடைய மாணவரை பிடித்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
இந்த மாணவர்கள் மோதல் சம்பவம் நடுக்கல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சாதிய ரீதியான தாக்குதலா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு பள்ளிகள் திறந்து சில நாட்களே ஆன நிலையில் முதல் முறையாக நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் மோதிய சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!