இந்தியாவில் 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள். 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இதன்படி நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நிதி ஆயோக் சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கடந்த 2015-ல் தொடங்கி இதுவரை 9 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இந்த டைம் மிஸ் ஆகாது..! டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின்.. பிரதமரை சந்தித்த பேச திட்டம்.!

கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதில் பங்கேற்காத நிலையில், மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என்றும் அதற்கு மேல் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதான் கூட்டாட்சி தத்துவமா? முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பா.ஜனதா அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கண்டித்தார்.

இந்த நிலையில், நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாக குழு கூட்டத்தை டெல்லியில் பிரதமர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் முக்கிய பிரமுகர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்; கூட்டம் முடிந்து, அன்றே சென்னை திரும்புகிறார். இந்த நிலையில் இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால், பிரதமரை சந்தித்து பேசுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு சந்தித்து பேசும் போது தமிழகத்திற்கு தேவையான நிதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை.. EDக்கு இடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!