தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 'கள் ஒரு போதைப் பொருள் அல்ல, கள் இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் இன்று கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், பனையேறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென சீமான், கள் இறக்க தேவையான பொருட்களுடன் கயிறு மூலம் கம்பு கட்டப்பட்டுள்ள சுமார் 22 அடி உயர பனைமரத்தில் சரசரவென ஏறி உச்சிக்கு சென்றார். பின்னர் பனைமரத்தில் இருந்து கள் இறக்கினார். அப்போது நாம் தமிழர் கட்சியினர் கள் எங்கள் உரிமை.. கள் எங்கள் உணவு என்று கூறி முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர்.
இதையும் படிங்க: முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..!

தொடர்ந்து கீழே இறங்கி வந்த சீமான், தான் இறக்கிய கள்ளை பனை ஓலை பட்டையில் தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்தார். ஆண், பெண் தொண்டர்கள் என பலரும் கள்ளை வாங்கி குடித்தனர். பனைமரத்தில் இருந்து கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி நாம் தமிழர் கட்சி கூறி வரும் நிலையில் இன்று சீமானே பனை மரத்தில் ஏறி கள் இறக்கியதால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

தொடர்ந்து சீமான் அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பனை எனது தேசிய மரம்.. அதனை நான் இழக்க முடியாது. பனை அதை நினை.. தாயை போல் கட்டி அணை.. 840 பயன்களை தரும் உலக உயிர் பனை மரம் தான். பனக்கள்ளை சாராயம் என்று சொன்னீர்கள் என்றால் நீங்கள் விற்பதற்கு பெயர் என்ன.. கள்ளை நஞ்சு என்று சொன்னால், அரசு நடத்தும் டாஸ்மாக்குகளில் விற்பது என்ன கோவிலில் கொடுக்கின்ற புனித நீரா.. என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கள்ளுக்கு தடை இல்லை.. ஆனால் இங்கு மட்டும் ஏன் கள் இறக்க தடை.. ஏனென்றால் வேறு எங்கும் சரக்கு விற்பவர்கள் ஆளவில்லை. இங்கு மட்டும் தான் இப்படி ஆள்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்ற சரக்கு.. இவர்கள் காய்க்கின்ற சரக்கு. தமிழகத்தில் சாராயத்தை காய்ச்சுபவர்களும், விற்பவர்களும் ஒரே ஆளாக இருக்கிறார்கள். கள் குடிப்பவர்கள் 3 லிட்டர் தான் அதிகம் குடிக்க முடியும். அதோடு அவன் போதும் என்று சொல்லிவிடுவான். 100 ரூபாய்க்குள் போய்விடும்.

ஆனால் இதோடு நீ போக கூடாது என்பதற்காக டாஸ்மாக்குகளை திறந்து குடித்துவிட்டு போங்க.. பொண்டாட்டியை அடிங்க.. போய் தகராறு செய்யுங்க என்று டாஸ்மாக்குக்களை திறந்து இருக்கிறார்கள். அப்பா சொல்கிறேன்.. இளைஞர்கள் யாரும் போதையில் செல்லாதீர்கள் என்று சொல்கிறார்.. ஆனால் அவரே தான் டாஸ்மாக்குகளை திறந்து வைத்திருக்கிறார் என்று சீமான் கூறினார்.
இதையும் படிங்க: நாளை வைகாசி விசாகம்.. இன்று விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. திருச்செந்தூரில் சோகம்..!