பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான சர்வ சமுதாயக் கூட்டம் அரசியல் லாபத்திற்கான ஒரு நாடகம் என்று ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சியின் தலைவர் இரத்தினசபாபதி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், புதிய அரசு அமைந்தவுடன் பாமக தனது அரசியல் முக்கியத்துவத்தை நிலைநாட்டவே இந்த கூட்டத்தைக் கூட்டியதாகத் தெரிவித்தார். மேலும், வன்னியர்களுக்கான 10.5% தனி இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றம் சென்ற பெரும்பாலான சமுதாய அமைப்புகள் இந்த கூட்டத்தில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் தவெக அரசு மற்றும் பாமக இடையேயான நகர்வுகள் குறித்துப் பேசிய இரத்தினசபாபதி, "தவெக-வின் மூத்த அமைச்சர் ஒருவர் வன்னியர் தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போதைய அரசியல் சூழலில் தவெக அரசுக்குச் சில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், எதிர்காலக் கூட்டணியைக் கருத்தில் கொண்டு இந்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வன்னியர் தனி இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிடும் அபாயம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றம் வன்னியர் தனி இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்த பிறகும், அவர்கள் முதலமைச்சரைத் தவறான வழியில் நடத்தி வருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "தவெகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை": வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்!
தமிழ்நாட்டில் மொத்தம் 252 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் உள்ள நிலையில், ஒரே ஒரு சமூகத்திற்காக மட்டும் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருவதை ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி கண்டித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைப் போலத் தமிழ்நாட்டிலும் மாநில அரசே முறையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று இரத்தினசபாபதி வலியுறுத்தினார். அதன் மூலம், எந்தெந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் அரசு வேலைகளில் இருக்கிறார்கள், எத்தனை பேர் பட்டதாரிகளாகவும் தொழில்முனைவோராகவும் இருக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வத் தரவுகளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் உண்மையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு சமூகத்திற்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், மாநிலத்தில் உள்ள மற்ற 251 சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து தீவிரமான போராட்டச் செயல்பாடுகளில் ஈடுபடுவோம் என்று இரத்தினசபாபதி எச்சரித்தார். இது குறித்துத் தவெக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமாரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளதாகக் கூறிய அவர், முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் வருமான வரம்பை மத்திய அரசின் விதிமுறைகளின்படி 2.5 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!