தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதற்காக பேருந்து சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதனை சமாளிக்க முடியாமல் பயணிகள் திணறி வருகின்றனர். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரித்து இருந்தார்.
ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருப்பது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு தலைநகரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நான்கு மடங்காக உள்ளதை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பியவுடன், காலங்கடந்து கட்டணத்தை திமுக அரசு குறைத்துள்ளதாகவும் இதனால் யாருக்கு என்ன பயன் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுள்ளார்.

போதிய அரசுப் பேருந்துகள் இல்லாததால், கூடுதல் தொகை என்று அறிந்தும், வேறு வழியின்றி ஒரு மாதத்திற்கு முன்பே ஆம்னியில் டிக்கெட் புக் செய்திருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்குத் தற்போது இழப்பீடு வழங்க முடியுமா என்ன என்றும் கேள்வி எழுப்பினார். நான்கரை ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், ஒருமுறை கூட முன்னரே திட்டமிட்டுத் தானாக முன்வந்து கட்டணத்தை நெறிபடுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குட்நியூஸ் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு...!
காலந்தாழ்ந்து கட்டணத்தைக் குறைப்பது மக்கள் குறையைத் தீர்த்தது போன்ற பாவ்லா காட்டுவதற்கா அல்லது ஆம்னி பேருந்துகளிடம் கமிஷன் பெற்று கல்லா கட்டுவதற்காகவா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுவதாகவும் சுட்டிக்காட்டினார். எது உண்மையென்று முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: இப்படியா பண்ணுவீங்க? ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்... அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை...!