விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, பயணிகளின் தேவையைச் சாதகமாக்கிக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கட்டணம் உயர்த்தி வசூலிப்பதாக ஏற்கெனவே புகார்கள் வந்துள்ளன.
விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாமல், எதிர்வரும் நாட்களில் அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறைகள் வர உள்ளதால், அந்த விடுமுறையைப் பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வது வழக்கம்.
இத்தகைய சூழலில், அடுத்தடுத்து பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறைகள் வருவதையொட்டி, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் வழக்கமான கட்டணத்தைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அது மிசா இல்ல... பெண்கள் CASE..!! ஸ்டாலின் கைது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு... திமுகவினர் கொந்தளிப்பு.!!
எனவே, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, அவ்வாறு வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஈடுபடுவதற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் செப்டம்பர் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19-ம் தேதி ஆயுத பூஜை, நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
பெரும்பாலான பண்டிகைகள் வார இறுதி நாட்களுடன் இணைந்து வருவதால், பொதுமக்களுக்கு அதிக அளவில் தொடர் விடுமுறைகள் கிடைக்கின்றன. இதனால் பலரும் சொந்த ஊர்களுக்குச் சென்று வரத் தயாராகி வருகின்றனர்.
இதன் காரணமாக, தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததையும் கடந்த இரண்டு நாட்களாகப் பார்க்க முடிகிறது.
அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், ஆம்னி பேருந்து ஆபரேட்டர்களும் வழக்கமான கட்டணத்தைவிட பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகத் தெரிகிறது.
குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் சில ஆபரேட்டர்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் கட்டணம் இவ்வாறு உயர்த்தப்பட்டிருப்பதால், பொதுமக்களும் பயணிகளும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, எதிர்வரும் நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கும் வகையில், போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட மூன்று பேர் இடம்பெற உள்ளனர்.
இந்தக் குழுவினர் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கியப் பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்தி, ஆம்னி பேருந்துகளை கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதோடு, தேவையான இடங்களில் அனுமதியை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை முறையாக சாலை வரி செலுத்தப்பட்டுள்ளதா, உரிய அனுமதிச் சீட்டு (பர்மிட்) உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் இந்த ஆய்வின்போது சரிபார்க்கப்பட உள்ளன.
மேலும், பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பேருந்து ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதோடு மட்டுமல்லாமல், உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக நிர்வாகி கொலை விவகாரம்... 5 பேருக்கு நீதிமன்ற காவல்.!! கோர்ட் உத்தரவு..!!