திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய மூன்று தாலுகாக்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அருங்குளம், எஸ்.சண்டிகை, எஸ்.அக்ரகாரம், பெரியகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், குழந்தைகள் பலரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள போதிய பணியாளர்கள் இல்லை என்றும், இதனால் நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தனி சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று தாலுகாக்களிலும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். அதேபோல், காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக அதிகளவில் வெயில் காணப்படும் நிலையில், மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இதுபோன்ற காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெயிலிலும் மழையிலும் மக்கள் தொடர்ந்து உட்படுவதால் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படலாம் எனக் கூறப்படும் நிலையில், அது தொடர்பான விழிப்புணர்வு முகாம்களை தமிழக அரசும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதால், அதற்கேற்றவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாட்டையைச் சுழற்றிய தமிழ்நாடு அரசு... ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை...!