நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள ஓவேலி பகுதியில் கடந்த மாதம் இரண்டு பேர் புலி தாக்கி உயிரிழந்தனர்.
இந்தப் புலியைப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் மற்றும் கடையடைப்புப் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, உடனடியாக அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தியோ அல்லது கூண்டு வைத்துப் பிடிக்கவோ தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: “சுட்டு பிடிங்க...” - உச்சக்கட்ட கொந்தளிப்பில் மக்கள்... தொகுதி முழுக்க எடுத்த அதிரடி முடிவு...!
அதன் அடிப்படையில், கடந்த 28 நாட்களாக வனத்துறையினர் புலியைப் பிடிப்பதற்குத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
குறிப்பாக, 200-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 210-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், மூன்று கும்கி யானைகள், ட்ரோன் கேமராக்கள் மற்றும் மயக்க ஊசி செலுத்துவதற்கான கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கடந்த 28 நாட்களாக புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களில், புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கிய சம்பவமும் நடைபெற்றது. ஆனால், அந்த முயற்சி வெற்றியடையவில்லை.
இந்த நிலையில், இன்று காலை சில்வர் கிளவுட் என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் புலியின் உறுமல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் கிடைத்ததும், வனத்துறையினர், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
தற்போது கூண்டில் சிக்கியிருப்பது, கடந்த காலத்தில் இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற ஆட்கொல்லிப் புலிதானா அல்லது வேறு புலியா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஒருவேளை கூண்டில் சிக்கியிருப்பது அந்த இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற புலி என்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
அதன் அடிப்படையில், அந்தப் புலியை சென்னைக்கு கொண்டு செல்வதா அல்லது மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு செல்வதா என்பது குறித்து அடுத்தகட்டமாக முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: இந்த ஆதாரம் போதுமா?... வன்னியரசு தலையில் இடியை இறக்கிய பாரதிதாசன் ... புதிய வீடியோவால் பரபரப்பு