பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் தொடர்பான முறைகேடு பத்திரப்பதிவு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், கடந்த 27ஆம் தேதி முதல் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினசரி ஆஜராகி வருகிறார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஷஜீதா மற்றும் டி.எஸ்.பி. அஜய்தங்கம் ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அவர் முன்ஜாமின் கோரி பழனி நீதிமன்றத்தை அணுக உள்ளார். ஜஸ்டின் மணிகண்டன் பணிபுரிந்த பழனி, கொடைக்கானல், தேனி, வடமதுரை மற்றும் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் இதேபோன்ற முறைகேடு பத்திரப்பதிவுகள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதா என தணிக்கைக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் அறிக்கை பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் மேலும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை அவர் பணியாற்றிய 10க்கும் மேற்பட்ட இடங்களில் மோசடிப் பதிவுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலவிஜய் என்பவரின் சொத்து மோசடி வழக்கும் இணைந்து விசாரணைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!
தற்போது காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வரும் பாலவிஜய்க்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் வீடு மற்றும் நிலத்தை கட்டதேவன் என்பவர் பராமரித்து வந்தார். பாலவிஜய் தனது சொத்தை விற்க முயன்றபோது, கட்டதேவன் மற்றும் அவரது உறவினர்கள் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து சொத்தை விற்பனை செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலவிஜய் கடந்த ஆண்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் கட்டதேவன், ஈஸ்வரன், அப்போதைய பெரியகுளம் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், ஓய்வுபெற்ற சிறப்பு ஆய்வாளர்கள் அம்மா வாசி, பாண்டியராஜன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் தேனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி இன்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பழனி கோவில் நில மோசடி வழக்கில் மாவட்டப் பதிவாளர் சசிகலா மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாகச் செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பழனியில் நிரந்தரமாகப் பணிபுரிந்த சார்பதிவாளர் பாலசந்தர் மற்றும் உதவி அலுவலர் சிவசங்கரி ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் பழனிக்கு மாறுதல் வந்த பாலசந்தர், முறைகேடு பதிவுக்கு வாய்ப்பில்லை என நிறுத்தி வைத்திருந்த ஆவணங்களைச் சரிபார்க்காமல் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்துள்ளார். விடுப்பு முடிந்து திரும்பிய பாலசந்தர் இதைக் கண்காணிக்காமல் விட்டதால், தகவல்களை மறைத்ததாகக் கூறி சிவசங்கரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: முக்கிய புள்ளிகளின் போலி கையெழுத்து... பழனி நில மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... சிபிசிஐடி கையில் சிக்கிய ஆவணம்...!