திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே நள்ளிரவில் லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்னையில் இருந்து வந்த குடும்பத்தினருக்கு நேர்ந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் லோகநாதன் (42). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது மனைவி பூங்கொடி (39), மகள் தனலட்சுமி (10), மாமியார் ராதா (65), மைத்துனர் மகன்கள் கோகுல் (10), பிரசாந்த் (15) ஆகியோருடன் நேற்று இரவு பெரியபாளையம் கோவிலுக்கு புறப்பட்டார்.
ஒரே ஆட்டோவில் ஆறு பேரும் பயணம் செய்தனர். பெரியபாளையம் நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, பன்பாக்கம் அருகே உள்ள எம்டிசி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: கொட்டும் மழையில் நடந்த கொடூரம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேன்... ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இதில் லோகநாதனின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லோகநாதனின் மாமியார் ராதா மற்றும் அவரது மைத்துனர் மகன் கோகுல் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் மூவருக்கு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் வழிபாட்டுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்த நிலையில், அவர்களின் பயணம் நள்ளிரவில் விபரீதமாக முடிந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!