தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், இந்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு, அமலாக்கத் துறை விசார்ணைக்கு தடை பெற்றுள்ளதால், இந்த வழக்குகளை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை நியாயமாக விசாரிக்காது என்பதால் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் கடந்த மே மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டும், மனுதாரர் தரப்பில் இதுவரை சேர்க்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு! தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான விசாரணை ஒத்திவைப்பு!
இதையடுத்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 22 ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கு: சொத்து விவரம் கேட்ட வழக்கறிஞரிடம் நீதிமன்றத்தில் வாக்குவாதம்!