டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என, அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல, தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த நடவடிக்கை எடுத்தனர்.
அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: மணல் கொள்ளை பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும்! சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்களில் சோதனை ஏதும் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். இதை ஏற்று, விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். அதேசமயம், ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை நடவடிக்கையை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை ஜனவரி மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்
இதையும் படிங்க: 11 மருத்துவக் கல்லூரிகள் முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு ஒத்திவைப்பு!