தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கானக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைக் குழுவை இன்று அறிவித்துள்ளது. "தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் எங்களது கூட்டணி அமையும்" என்று டாக்டர் ராமதாஸ் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இந்தக் குழு அமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். இந்தக் குழுவில் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, மாநிலப் பொருளாளர் திலகபாமா, ஏ.கே. மூர்த்தி மற்றும் வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட ஐந்து முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழுவினர் மற்றக் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினரைச் சந்தித்து, பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்டத் தொகுதிகள் குறித்து விரிவாகப் பேசுவார்கள்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!
பாமக-வில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிளவு மற்றும் 'மாம்பழம்' சின்னம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இடையே, இந்தக் குழுவின் பேச்சுவார்த்தை முடிவுகள் டாக்டர் ராமதாஸின் அரசியல் நகர்வுக்கு வலுசேர்ப்பதாக அமையும்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், "இன்னும் மூன்று நாட்களில் சஸ்பென்ஸ் உடையும்" எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அடுத்த 72 மணி நேரத்திற்குள் அதிமுக அல்லது வேறு ஏதேனும் ஒரு முக்கியக் கூட்டணியுடன் பாமக அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷாவுடன் இன்று இரவு தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தை!