தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் மேட்டூர் பாசன விவசாயிகளுக்கான இழப்பீடு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகாத சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவுக்கும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.
இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், வினோத், வெங்கடரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயச் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன் பேசுகையில், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்போதே விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சரிடம் கொண்டு செல்வதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாததால் தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!
தொடர்ந்து பேசிய அய்யாக்கண்ணு, ஏழு அமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து எங்களது கோரிக்கைகளைக் கேட்பது இதுவே முதல்முறை. குறுவை சாகுபடி பொய்த்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையை எடுத்துக்கூறி பயிர்க்கடன் தள்ளுபடி கோரியுள்ளோம். கர்நாடக அரசிடமிருந்து நஷ்டஈடு பெற்றுத் தரவும் வலியுறுத்தியுள்ளோம். எங்களது கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசி ஒரு நல்ல முடிவை ஒரு வாரத்திற்குள் அறிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் எனக் கூறினார்.
இதையும் படிங்க: என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! எம்.எல்.ஏ-க்களுடன் சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!