காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் வேலை செய்வோரை குறிவைத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து வருகின்றன. ஹரியானாவில் யூ-டியூப் சேனல் நடத்தி வரும் ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. நாட்டின் முக்கிய இடங்கள் குறித்த தகவல்கள், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதன் மூலமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி வந்துள்ளார்.
இதையும் படிங்க: வெறும் 8 மணி நேரம் தான்.. ஆட்டம் க்ளோஸ்.. பாக்., போன் பண்ணி கெஞ்சியதாக அனில் சவுகான் விளக்கம்..!
அவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் மட்டும் அவர் உள்பட மொத்தம் 4 பேர் உளவு சொன்ன குற்றத்துக்காக கைதாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 2 பெண்கள், உத்தரப்பிரதேசத்தில் 6 பேர் என மொத்தம் 12 பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து உளவு சொன்ன குற்றச்சாட்டுகளில் கைதாகி இருக்கின்றனர்.

அவர்கள் வரிசையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக CRPF எனப்படும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் மோதி ராம் ஜாட் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். அவரை தொடர்ந்து ராஜஸ்தானின் காங்கிரஸ் மாஜி அமைச்சர் ஷாலே முகமதுவின் முன்னாள் உதவியாளர் ஷாகுர் கானை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 'ஜான் மஹால்' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜஸ்பிர் சிங்கிற்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020, 2021 மற்றும் 2024 என 3 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார் ஜஸ்பிர் சிங். பாகிஸ்தானிற்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்கோத்ரா கைதான பின், ஐஸ்பிர் சிங் தன்னிடம் இருந்த தகவல் தொடர்பு ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜஸ்பிர் சிங் பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரியான ஷாகிஸ் என்கிற ஜுத் ரன்தாவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். மேலும் இவரின் மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது பல்வேறு பாகிஸ்தானை சேர்ந்த தொடர்பு எண்கள் அழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இவர் அரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். அதேபோல், பாகிஸ்தானியரான, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய முன்னால் அதிகாரி ஈஷன் உர் ரஹீம் என்பருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது என்று பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதுக்கு இப்போ என்ன அவசியம்.. ராகுல்காந்தி, கார்கே கோரிக்கைக்கு ’No’ சொன்ன மோடி..!