பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து இரண்டு துண்டுகளாக மாறியது. முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் ஆரம்பித்த பிரச்சனை இன்றுவரை ஓயவில்லை. விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்ற வார்த்தையை ராமதாஸ் கூறியதில் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த தொண்டர்கள், தற்போது அன்புமணியை ஆதரிப்பதா ராமதாசை ஆதரிப்பதா என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சி பதவியில் இருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை நீண்டு வருகிறது.
இந்த நிலையில், அன்புமணி கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாமக நலன் முக்கியமில்லையா? அன்புமணி, ராமதாஸ் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு
தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும் மனுவில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பாமகவில் அன்புமணியின் பதவி காலம் கடந்த மே மாதம் 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர குழு, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், அன்புமணி கூட்டம் உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் தாங்கள் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் இன்று மாலை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரையும் நீதிமன்றத்தில் உள்ள தனது அறையில் மாலை 5.30 மணிக்கு ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ராமதாஸ் இன்று நீதிமன்றத்துக்கு வரமாட்டார் என அவரது தரப்பு வழக்கறிஞர் கூறினார். உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என ராமதாஸ் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். உடல் நலனை ராமதாஸ் காரணம் காட்டி வர இயலாது எனக் கூறி நீதிபதிக்கு கடிதம் தருமாறு ராமதாஸ் தன்னிடம் கூறியதாக வழக்கறிஞர் கோபு கூறினார்.
இதையும் படிங்க: “பாமகவின் சின்னமும், கட்சி அங்கீகாரமும் போய்விட்டது”... உண்மையை போட்டுடைத்த ராமதாஸ் - அதிர்ச்சியில் அன்புமணி ஆதரவாளர்கள்...!