தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்ந்து வரும் நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களைக் கைது செய்த இலங்கை நீதிமன்றம், அவர்களை வரும் 17-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முறைப்படி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்கள் மன்னார் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்தனர்.
மீனவர்களின் ஒரு விசைப்படகையும், அதிலிருந்த நான்கு மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை இழுத்துச் சென்று இலங்கை கடற்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை அட்டூழியம்.... ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு!

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை சிறைக் காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, நான்கு மீனவர்களும் பலத்த பாதுகாப்புடன் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
நமது மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் செல்லும் போதெல்லாம், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் மீனவச் சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.
மீனவர் கைது விவகாரம் தமிழக அரசியல் களத்திலும் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும் இலங்கை அரசின் இந்த அநாகரிகமான செயலைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். தொடர்ந்து வரும் மீனவர் கைதுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை அட்டூழியம்.... ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு!