தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சேலத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பரப்புரை சாலைவலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.
நடப்புத் தேர்தல் களத்தில் முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கமல்ஹாசன் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல், 'இந்தியா' கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள நிலையில், கமலின் இந்தப் பங்கேற்பு கூட்டணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.
சேலம் அண்ணா பூங்காவில் இருந்து தொடங்கிய இந்தச் சாலைவலம் (Roadshow), நகரின் முக்கிய வீதிகள் வழியாகக் கோட்டை மைதானத்தை நோக்கிச் சென்றது. முதலமைச்சர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கைகோர்த்து நடந்து சென்றது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நடைபயணத்தின் போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: நாளை மாலை தவெக-வின் முழு வாக்குறுதிகள் பட்டியல்! சென்னை நுங்கம்பாக்கத்தில் விஜய் வெளியிடுகிறார்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்தக் கூட்டணியில் இணைந்த பிறகு, சேலம் மண்ணில் நடைபெறும் இந்த முதல் கூட்டுப் பரப்புரை அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என ஏற்கனவே பிரேமலதா தேர்தல் களத்தில் முழங்கி வரும் நிலையில், இன்று மூவரும் ஒரே பாதையில் பயணித்தது கூட்டணியின் ஒற்றுமையை நிரூபித்தது.
திமுக, மநீம, மற்றும் தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளின் கொடிகளும் சேலம் மாநகரம் முழுவதும் அணிவகுத்து நின்றன. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற இந்தச் சாலைவலத்தில், பாசிசம் வீழட்டும், தமிழகம் வெல்லட்டும் என்ற முழக்கங்கள் விண்ணதிர ஒலித்தன.
சேலத்தில் இன்று நிகழ்ந்த இந்த 'மாஸ்' சாலைவலம், தேர்தல் நெருங்கும் வேளையில் 'இந்தியா' கூட்டணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: தருமபுரி பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட மண்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!