இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்த மத்திய அரசின் நீர்வளத்துறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பாஜக அரசு வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வருங்காலங்களில் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் வேளாண்மையை முற்று முழுதாக அழித்தொழித்து ஒட்டுமொத்த நாட்டையும் மீட்கவியலா பெரும் பஞ்சத்தில் தள்ள வழிவகுக்கும் பாஜக அரசின் இக்கொடிய முடிவு சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஶ்ரீகாந்த் கைது.. சீமான் சொன்ன வார்த்தை..! விழிப்பிதுங்கிய முக்கிய தலைகள்..!

வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிக்கும் கொள்கை முடிவானது முதன் முதலாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பின் காரணமாக கிடப்பில் போடப்பட்டதாகவும், அக்கொடுந்திட்டத்தை தற்போது பாஜக மீண்டும் கொண்டுவர முடிவு செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் என்றும் தெரிவித்துள்ளார்.

வேளாண்மைக்கு நிலத்தடி நீர் எடுக்க மின்சாரம் இலவசம் ஆனால், நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நீருக்கு வரி என்பது முட்டாள்தனமாக இல்லையா என்ற கேள்வி எழுப்பிய சீமான், வரிக்கு மேல் வரி செலுத்தி வரியால் விவசாயிகள் வயிறும் வாழ்வும் எரிந்து இருளாகி போனதாக வேதனை தெரிவித்துள்ளார். ஓரவஞ்சனையாக செயல்பட்டு இந்தியாவை ஆண்ட காங்கிரஸ், பாஜக அரசுகள் தமிழ்நாட்டு நதிநீர் உரிமையை தட்டிப்பறித்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கியது போதாதா என்றும் முப்போகம் விளைந்த தமிழர் நிலத்தில், நிலத்தடி நீர் மூலம் ஒருபோகம் விளைவித்து வரும், தமிழக விவசாயிகளின் வயிற்றிலும் மோடி அரசு அடிக்க முயல்வது நியாயம்தானா எனவும் கேள்வி எழுப்பினார்.

நின்றால், நடந்தால், நாட்டு மக்களுக்கு வரி.,எதை விற்றாலும் வரி., எதை வாங்கினாலும் வரி., ஆனால், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு பறக்கும் விமானம் முதல் நாடாளுமன்ற உணவகத்தில் உண்ணும் உணவு வரை அனைத்திற்கும் சலுகை., இது யாருக்கான நாடு என்று சீமான் கடுமையாக சாடினார். வேளாண்மையை முற்று முழுதாக அழித்தொழித்து, விளைநிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற்றி, அதனை கார்ப்பரேட் கைகளில் ஒப்படைத்து நாட்டு மக்களை உணவிற்கு கையேந்த வைப்பதற்கான சூழ்ச்சியே நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் கொடுந்திட்டம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: 'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்..! திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!