இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்...உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம். தேனி மலைச்சரிவில் ஒளிந்திருக்கும் சிற்றூரில் பிறந்து இன்று உலகத்திற்கே இன்னிசை புகட்டும் எங்களது இசை இறைவன் என்று புகழ்ந்துள்ளார்.

பசியில் கிடந்து பரிதவித்து தனிமையில் தவித்திருக்கும் பொழுதினை, தோல்வியின் வலி துவண்டு இருக்கும் மனிதனை, மனித வாழ்வில் எங்கிருந்தோ வந்து தொற்றும் துயரில் உடைந்து போகும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உறையும் ஆன்மாவை, இசை என்ற இன்ப உலகிற்குள் தனது ராகங்களின் சிறகுகளால் காற்றில் மிதந்தபடி, கை பிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இளையராஜா, மனித உணர்ச்சிகளுக்கு இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 500 கிமீ தூரத்துக்கு TRANSFER! சிறை தண்டனையை விட கொடுமை... காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்!

தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் இசை என்ற பெரும் ஞானத்தை உலகத்திற்கே போதிக்கும் இசைஞானத்தின் போதிமரம் என்றும் தமிழினத்தின் பெருமைமிக்க உலக அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, இன்னும்... இன்னும்... அவருக்குள்ளாகச் சுரந்துக் கொண்டே இருக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என அவரது பிறந்த நாளில் உளமார வாழ்த்துவதாக சீமான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...