திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீது, போதைப் பழக்கத்திற்கு அடிமையான நான்கு இளம் சிறார்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது என்றும் அத்தனை சமூக அவலங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கையாலாகாத்தனம் வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் கூறினார்.
வட மாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவது, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்குற்றமோ அதே அளவிற்கு, குடும்ப வறுமைக்காகப் பிழைப்பு தேடி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குள் தாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமை என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மலிவுவிலை மதுக்கடைகளால் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்து கொடுங்குற்றங்கள் வேகமாகப் பெருகி வருவதாகவும், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காத அளவிற்கு வளர்ந்து கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். மது விற்பனையைத் தடை செய்வதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம் என்றும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறுப்பது ஏன் என்றும் அதிமுக ஆட்சியில் குட்காவுக்கு எதிராக சட்டமன்றம் வரை பேசிய திமுக, தன்னுடைய ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை குறித்து வாய் திறவாதது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பாஜக கூட கூட்டணி வச்சு எம்.எல்.ஏ ஆனது யாரு? நானா? திருமாவளவனா? சீமான் கிடுக்குப்பிடி கேள்வி!
வடமாநில தொழிலாளி சிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதல்போல இனி ஒரு கொடூர நிகழ்வு நடந்திடாமல் தடுத்திடவும், சீரழியும் தமிழிளம் தலைமுறையைக் காத்திடவும், மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதோடு, கஞ்சா விற்பனையை முற்று முழுதாக தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று சீமான் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எல்லாமே பெரியார்தான் என்பவன் எனக்கு ஓட்டு போட வேண்டாம்... சீமான் தடாலடி...!