கே.ஏ. செங்கோட்டையன் தமிழக அரசியலில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் இருந்து வந்தவர். எம்ஜிஆர் காலத்திலிருந்தே கழகத்தில் இணைந்து, பல்வேறு பதவிகளை வகித்து, முதல்வர்கள் காலங்களில் அமைச்சராகவும் பணியாற்றியவர். குறிப்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவரது விசுவாசமும், கட்சி மீதான அர்ப்பணிப்பும் மிகவும் பேசப்பட்டவை. ஜெயலலிதா பல மேடைகளில் செங்கோட்டையனை "கொள்கை உறுதியும், தலைமை மீது விசுவாசமும் உள்ள அன்புச் சகோதரர்" என்று பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த வார்த்தைகள் அவரது வாழ்க்கையில் ஆழமான இடத்தைப் பிடித்திருந்தன. ஜெயலலிதா இருந்த காலத்தில் கட்சி பிளவுகள் வந்தபோது கூட, செங்கோட்டையன் ஜெயலலிதா அணியில் உறுதியாக நின்று, வெற்றி பெற்றார். ஜெயலலிதா இறந்த பிறகும், அவரது புகைப்படங்கள், பேச்சுகள் ஒலிக்கும் மேடைகளில் செங்கோட்டையன் கண்கலங்கிய காட்சிகள் பலருக்கும் நினைவிருக்கும். ஆனால் காலம் மாறியது. அதிமுகவில் உள் கட்சி முரண்பாடுகள் தீவிரமானபோது, செங்கோட்டையன் கட்சி ஒற்றுமைக்காக குரல் கொடுத்தார். அதற்காகவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

2025 நவம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். அங்கு அவருக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி, மேலும் சில மாவட்டங்களுக்கு அமைப்புப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இந்த மாற்றம் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், செங்கோட்டையனின் உள்ளத்தில் ஜெயலலிதா மீதான பற்று குறைந்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தனது சட்டைப்பையில் செங்கோட்டையன் வைத்திருப்பதை காண முடிந்தது.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்...!! - ஜெயலலிதா பிறந்தநாளில் சபதமேற்ற இபிஎஸ்... அதிமுக தொண்டர்கள் உற்சாகம்...!
இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது திருவுருவப்படத்திற்கு செங்கோட்டையன் மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக கூறியுள்ள செங்கோட்டையன், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெ. பிறந்தநாள் சர்ப்ரைஸ்..! முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் EPS? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!