தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
தமிழக அரசின் கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அரசுப் பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளன.
நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே, மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனுஷின் 'கர' படத்திற்குச் சிக்கல்: தலைப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
1-ஆம் வகுப்பில், புதிய கல்வியாண்டில் மட்டும் இதுவரை 97,737 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 2 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும், மற்ற பள்ளிகளிலிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 8,178 ஆகும்.
அரசுப் பள்ளிகளில் செயல்படும் மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதன்படி, ஒட்டுமொத்தமாக இதுவரை 1,12,711 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் 'இல்லம் தேடி கல்வி', 'எண்ணும் எழுத்தும்' போன்ற சிறப்புத் திட்டங்கள் மற்றும் காலை உணவுத் திட்டம் ஆகியவை மாணவர் சேர்க்கை அதிகரிக்க முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
மேலும், பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் கற்பித்தல் முறையும் பெற்றோர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்த்துள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் மாணவர்களை வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!