சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளின் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலத்தின் இரும்பு பாகங்களை பொருத்தும் பணிக்காக, இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை 5 மணி நேர மின் மற்றும் ரயில் பாதைத் தடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக குறிப்பாக இரவு நேரம் மற்றும் அதிகாலை இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை:
வேலை நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு 10.20, 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்கு புறப்படும் 4 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
மேலும், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரயில், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15 மற்றும் 11.20 மணிக்கு புறப்படும் ரயில்கள், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மற்றும் 11 மணிக்கு புறப்படும் ரயில்கள் ஆகியவை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதனால் தாம்பரம் – சென்னை கடற்கரை இடையிலான சேவை பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இதே காலகட்டத்தில், சென்னை கடற்கரையில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில் 5 நிமிடங்கள் மாற்றப்பட்டு 9.50 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரயில் 5 நிமிடங்கள் முன்னதாக, இரவு 10.15 மணிக்கு புறப்படும்.
அதிகாலை ரயிலிலும் மாற்றம்:
ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை வேலை நாட்களில், சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதனால் அந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் ரத்து:
ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அன்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரவு 10, 11.20, 11.40 மற்றும் 11.59 மணி ரயில்கள், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரயில் மற்றும் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மற்றும் 11.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் என மொத்தம் 7 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும் சில ரயில்களின் சேவை பகுதி ரத்து செய்யப்படுவதுடன், குறிப்பிட்ட ரயில்களின் நேரமும் மாற்றப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு முன்பும் இந்தப் பணிகளால் சில விரைவு மற்றும் புறநகர் ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
எனவே, இந்த காலகட்டத்தில் சென்னை கடற்கரை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இரவு அல்லது அதிகாலை நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள், ரயிலின் மாற்றப்பட்ட நேரம் மற்றும் சேவை நிலையை முன்கூட்டியே சரிபார்த்து பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!