காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக 2018-ல் எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019-ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ‘ஸ்டேட்டஸ் கோ’ (தற்போதைய நிலை தொடர வேண்டும்) உத்தரவு பெற்றது. இதனால் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக கட்டப்பட்ட 800-க்கும் மேற்பட்ட வீடுகளின் பதிவுகள் தடை செய்யப்பட்டன. வீடு வாங்கிய பொதுமக்கள் ஆறு ஆண்டுகளாக பட்டா, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அரசின் ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நேற்று நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: ஜனநாயக கடமையாற்ற தமிழகம் வந்த 3 பேர்!! ஓசூர் அருகே விபத்தில் பலி!

உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் கூறியதாவது:
“தமிழக அரசு தூக்கத்தில் இருந்து திடீரென விழித்துக்கொண்டு, 30-40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிலத்தை தங்களுடையது என்று உரிமை கோர முடியாது. காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றி, அப்பாவி குடிமக்களின் உரிமைகளை பறிக்க முடியாது. பல ஆண்டுகளாக ஒரு நிலத்தை அனுபவித்து வரும் நபரிடமிருந்து அரசு தன்னிச்சையாக நில உரிமையை பறிக்க முடியாது. நில விவகாரம் நிலுவையில் இருப்பதால், அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளை மறுக்கக் கூடாது.”
உச்ச நீதிமன்றம் 2019-ல் பிறப்பிக்கப்பட்ட ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவை ரத்து செய்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இரண்டு மாதங்களுக்குள் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த உத்தரவு தாழம்பூர் பகுதியில் வீடு வாங்கிய ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஆறு ஆண்டுகளாக தவித்து வந்தவர்கள் இப்போது பட்டா மற்றும் அடிப்படை வசதிகளைப் பெற வழி பிறந்துள்ளது.
இதையும் படிங்க: கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!