தமிழகத்தையே உலுக்கிய மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம்குமார், சிறையில் மரணமடைந்தது தொடர்பான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக முடித்துவைத்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராம்குமார் புழல் சிறையில் மின்சாரக் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகச் சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம். ராம்குமார் மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் உறுதியாகிவிட்டதாகவும் தெரிவித்தது. இந்தத் தரவுகளை ஏற்றுக்கொண்ட ஆணையம், ராம்குமார் மரணம் தொடர்பான புகாரை ஏற்கனவே முடித்துவைத்தது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்துவைத்ததை எதிர்த்து, ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தனது மகன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவனது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் தொடர்ந்து வாதிட்டு வந்தார். இந்த வழக்கைச் சிபிஐ அல்லது தன்னாட்சி பெற்ற அமைப்பு மூலம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இதையும் படிங்க: அன்புமணி எம்.பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!
பரமசிவம் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை முடித்துவைப்பதாக உத்தரவிட்டது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப் போராட்டம், தற்போதைய உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நடைபெற்று வந்த சூழலில், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் சிறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது! கைதிகள் விடுதலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!